சென்னை:
திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வமான இதழ் முரசொலி. 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவக்கப்பட்டது. 79 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 80-ஆம் ஆண்டில் அடிவைக்கிறது முரசொலி நாளிதழ்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மூத்த பிள்ளை என்று முரசொலியை அழைப்பதுண்டு. தேர்தல் களங்களில் முரசொலியின் வாசகங்கள் திமுக வாக்குபலத்தைப் பன்மடங்கு பெருக்குகின்ற வலிமை கொண்டவை என்று அனைவராலும் பாராட்டப்பட்ட இதழ் முரசொலி.
கலைஞர் கருணாநிதியால் திருவாரூரில் துண்டு அறிக்கையாக தொடங்கப்பட்ட முரசொலி பின்னர், வார ஏடாகவும் அதன் பின்னர் நாளிதழாகவும் வெளியிடப்படுகிறது.
திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் அரசின் கெஜட் போல மக்களுக்கான திட்டங்களின் பலன்களை விரிவாக மக்களிடமும் தொண்டர்களிடமும் விளக்கி எடுத்துச் செல்லும். எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மக்களின் பக்கம் நின்று ஒரு புலனாய்வு ஏடுபோல முரசொலி செயல்பட்டதும் வரலாறு.
முரசொலியில் உடன்பிறப்பே என்று தொடங்கும் கலைஞரின் கடிதங்களும் அதில் உள்ள கருத்துகளும் தொண்டர்களை நேரில் சந்தித்து உரையாடுகின்ற உணர்வைத் தரக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.