கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
இந்நிலையில் ,தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘இது கொரோனா என்கிற பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக மிக அவசியமானது முகக்கவசம். இந்த முகக்கவசம் இன்று மனிதர்களுக்கு உயிர் கவசமாக மாறியுள்ளது. இந்த முகக்கவசத்தை அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசத்தை முழுமையாக மூக்கு, வாயை மூடியிருக்கும் அளவுக்கு போடுங்கள்.
முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம். வரும்முன் காப்போம், கொரோனா இல்லா தமிழகம் அமைப்போம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.