மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு பா.ஜ.க தொண்டர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோவிலின் உள்ளே பிரதமர் மோடியின் மார்பளவு உருவச்சிலையையும் வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள 37 வயதான மயூர் முண்டே என்பவர் தான் பிரதமர் மோடிக்கு கோவிலை காட்டியுள்ளார்.
இவர் ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்து வருகிறார். பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் மயூர் முண்டே, அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு, தான் நன்றி செலுத்தும் மரியாதையே இந்த கோவில் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மயூர் முண்டே மேலும் கூறுகையில்,
” அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிய ஒருவருக்கு ஒரு சன்னதி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆகையால் இந்த கோவிலை எனது சொந்த வளாகத்தில் கட்ட முடிவு செய்தேன்.
பிரதமரின் மார்பளவு சிலை மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டன’.
பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையும் மோடி உருவச்சிலைக்கு அருகில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு, இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
அவருக்கு கோவில் எழுப்பி இருப்பது பொருத்தமான ஒன்று என்று பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் இப்படி தேவையில்லாமல் கோவில் கட்டி பணத்தை வீணாக்குவதை விட்டு, விட்டு மோடியின் பெயரால் ஏழை மக்களுக்கு அந்த பணத்தை கொண்டு உதவி செய்ய வேண்டியதுதானே என்றும்
ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
மயூர் முண்டே மோடிக்கு கட்டிய கோவில் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் பலர் அந்த கோவிலை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.