டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலரான சிக்காவை மதுரையில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு அதில் ஆபாச நடனமாடி புகழ் பெற்ற ரவுடி பேபி சூர்யா என்பவர் யூ-டியூப்பில் சேனல் ஒன்றை தொடங்கி நடத்திவைத்தார். அதில் தனது காதலரான சிக்கா என்கிற சிக்கந்தர் உடன் சேர்ந்து ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். திருப்பூரைச் சேர்ந்த சூர்யா, சிக்காவிற்காக மதுரையில் உள்ள திருநகரில் வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர். இருவரும் சமீபத்தில் பிரிந்த நிலையில், இருவரையும் ஒரே புகாரில் ஜோடியாக தூக்கியிருக்கிறது காவல்துறை.
கோவையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக பேசியதாக கோவை சைபர் க்ரைம் போலீசில் ரவுடி பேபி சூர்யா, சிக்கா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், இன்று ரவுடி பேபி சூர்யா, சிக்கா இருவரையும் மதுரையில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர். ஏற்கனவே ஆபாச வீடியோக்களை வெளியிடுவதால் இருவரையும் கைது செய்ய வேண்டுமென புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குவிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.