தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து வேறு எந்த தொழிலும் நடைபெறக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வாணையத்தினால் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு 8ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் பிற்பகலில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. சற்று நேரத்திற்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ‘வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம். நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.