தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீயாய் பரவி வருகிறது. சுனாமி பேரலையைப் போல் முழு வீச்சில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணங்களுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கெனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளது.