தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீயாய் பரவி வருகிறது. சுனாமி பேரலையைப் போல் முழு வீச்சில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பொது முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதுமானது எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.