அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெறுவதற்கான காரணம் என்ன?
பழனி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது பஞ்சாமிர்தம்..அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள தமிழ் கடவுளான முருக பெருமானின் சிலை, பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகரால் நவபாசணத்தில் செய்யப்பட்டது என்ற சிறப்புக்குரியதாகும்…
அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு, அவரது தாயார் பார்வதி தேவி ஞானவேலை வழங்கிய தினமே தைப் பூசத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த ஞானவேல் கொண்டே கந்தன் திருச்செந்தூரில் அரக்கர்களை வதம் புரிந்து தேவர்களை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன….ஆண்டுதோறும் இந்த தைப்பூசத் திருவிழா முருகன் கோயில்களில், குறிப்பாக அறுபடை வீடுகளில் வெகு விமரிசைகாக கொண்டாடப்படுகிறது….
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் முருகன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவார். விழாவின் 7-ம் நாளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில், முருகன் தாயாரிடம் வேல் வாங்கும் நிகழ்வும், அதனைக் கொண்டு அசுரர்களை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறும். இதனைக்காண தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தருவர். அதனை தொடர்ந்து 10 நாளில் தேரோட்டத்துடன் இந்தத் தைப் பூசத் திருவிழா நிறைவுபெறும்.
பழனி முருகன் ஞானவேலை பெற்றதால், இக்கோயிலில் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரை மேற்கொண்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.