டெல்லி:-
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு டெல்லியின் சத்தார்பூர் (Sattarpur) பகுதியில் உள்ள ராதா சொவாமி சாஸ்டாங் பீஸ் (Radha Soami Satsang Beas) வளாகத்தில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ராதா சொவாமி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொரோனா நோயாளிகளுக்கான வசதியைச் செயல்படுத்த இந்திய- திபெத் எல்லைக் காவல்படை பொறுப்பேற்றுள்ளது. இந்த மருத்துவமனைக்கு “சர்தார் பட்டேல்” பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சீனாவில் லெய்ஷென்ஷான் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட 1,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வசதியைவிட டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி 10 மடங்கு பெரியதாகும்.
லேசான மற்றும் மிதமான நோய்த்தொற்று உள்ளவர்களை குணப்படுத்தவும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வெண்டிலேட்டர் போன்ற சாதனங்கள் இந்த மருத்துவமனையில் உள்ளது. 875 மருத்துவர்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் நியமனம் செய்ய டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் 10 சதவிகிதப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்யப்படும் (கார்ட்போர்ட்) அட்டைகளிலிருந்து படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமித் ஷா தமது டிவிட்டரில், மருத்துவமனையை இயக்க உள்ள இந்தோ திபெத் எல்லை காவல்படைக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு எல்லாவகையான மருத்துவ வசதிகளையும் செய்து தர தயாராக இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், 18,000 டன் அளவு குளிர்சாதன வசதியைக் கொண்டிருக்கும் இவ்வசதியில் உணவும் வழங்கப்படும். 29 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள வசதியோடு 50 ஏக்கர் பரப்பளவில் குளியலறை, கழிப்பறை மற்றும் வாகன நிறுத்த வசதிகளும் வழங்கப்படும் என்று மையத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.