நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் கேரளாவில் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா நடித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படம் உலகம் முழுவதும் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற தர்பார் திரைப்படம் வசூலில் ரூபாய் 150 கோடியை கடந்ததாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்தது.
இந்நிலையில் தர்பார் திரைப்படம் கேரளாவில் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.மேலும் இதுவரை கேரளாவில் மொத்தம் ரூ. 7.8 கோடி தான் வசூல் செய்துள்ளதாகவும், ரூபாய் 12 கோடி அளவிற்கு வசூல் வந்தால்தான் அனைவருக்கும் லாபம் என்ற நிலையில் படத்தின் வசூல் விநியோகஸ்தர்களை கவலையடைய செய்துள்ளது.
இதனால் தற்போது படம் கேரளாவில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் எந்திரனுக்கு பிறகு கேரளாவில் ரஜினி நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.