நடிகை தீபிகா படுகோனின் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகி சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ‘சப்பக்’. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கைக் கதையை இத்திரைப்படம் காட்டுகிறது.
இத்திரைப்படத்தில் கூறப்பட்ட கருத்தால் ஈர்க்கப்பட்டு உத்தரகண்ட் அரசு தனது மாநிலத்தில் ஒரு புது சட்டத்தையே அமல்படுத்தியுள்ளது. சப்பக் திரைப்படத்துக்கு புதுச்சேரி, மத்திய பிரதேஷ், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் வரிவிலக்கு அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 5,000 ரூபாய் – 6,000 ரூபாய் வரையில் பென்சன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை துரித கதியில் அரசு செயல்படுத்தி வருகிறது என மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் தெருவில் நடந்து செல்லும் போது இந்த சமூகம் அவளைப் பார்க்கும் விதத்தை தானே முன் சென்று வீடியோ பதிவாக்கினார் தீபிகா.
தற்போது தனது குழுவினருடன் சென்று மும்பை நகருக்குள்ளேயே எவ்வளவு எளிதில் ஆசிட் வாங்க முடிகிறது என்பதைக் காட்டும் முயற்சியை தீபிகா மேற்கொண்டார்.
ரகசிய கேமிரா மூலம் நடிகர்கள் மாறு வேடமிட்டு கடைகளுக்குச் சென்று ஆசிட் வாங்குவது படமாக்கப்படுகிறது. பல கடைகளிலும் எளிதில் ஆசிட் வாங்க முடிந்தது. யாரும் எவ்வித பாதுகாப்பு அல்லது சட்ட நடைமுறைகளை மதிக்கவே இல்லை.