ஆன்லைனில் மதுபாட்டில்களை ஆர்டர் செய்த நடிகை பிரியா பானர்ஜியிடம் ரூபாய் 35 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கில் கிஸ்,அசுரா போன்ற படங்களிலும், இந்தியில் தேவ் படத்திலும் நடித்தவர் நடிகை பிரியா பானர்ஜி. இவர் தமிழில் நடிகர் விதார்த் நடித்த ‘சித்திரம் பேசுதடி-2’வில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
இவர் தற்போது மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் மதுபாட்டில்களை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு இவரது மொபைலுக்கு வந்த அழைப்பில் முதலில் பணம் செலுத்தினால் மதுபாட்டில்களை வீட்டிற்கு கொண்டு வருவதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் டெபிட் கார்டு விவரங்களையும் பெற்றுள்ளார். உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.22 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக மொபைலுக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை பிரியா பானர்ஜி, தன்னை தொடர்பு கொண்ட நபருக்கு மீண்டும் கால் செய்து கேட்ட போது தவறுதலாக பணம் எடுக்கப் பட்டு விட்டதாகவும், தங்களுடைய கூகுள் பே தகவல்களை சொன்னால் திரும்ப அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய நடிகை பிரியா பானர்ஜி அது பற்றிய தகவல்களை தெரிவிக்க மீண்டும் அவரது அக்கவுண்டில் இருந்து ரூபாய் 13 ஆயிரம் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து தன்னிடம் பண மோசடி நடந்தது உணர்ந்த நடிகை பிரியா பானர்ஜி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் பணப் பரிமாற்றம் நடைபெறுவதை தடுத்தனர். மோசடியில் ஈடுபட்ட நபரை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.