திரிச்சூர்:-
அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சாச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாச்சியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் மாபெரும் ஹிட்டான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மொழிகளைத் தாண்டி பெரும் ஹிட்டடித்தது அய்யப்பனும் கோஷியும். இதன் பாலிவுட் ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 15ம் தேதி) சாச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று, வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், திடீரென இன்று ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று அவரது நண்பரும் எழுத்தாளருமான சேது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், கன்னடத்தில் சிரஞ்சீவி சார்ஜா என அடுத்தடுத்து மரணங்களால் திரைத்துறையே அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், இந்த செய்தி பிரபலங்களை வேதனையடைய வைத்துள்ளது.
இயக்குநர் சாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட பிருத்விராஜ் உடனடியாக நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.