சென்னை:
நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, ‘லைகா’ நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து ‘லைகா’ தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, ஐதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக லைகா நிறுவனத்தின் மீது புகார் கூறினார்.
மேலும், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளிவைக்க லைகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள தடை கோரிய மனு மீது தீர்வு கண்ட பின், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என்று கூறி, இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு, மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.