பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3வது அலை அளவிற்கு தொற்று பரவத்தொடங்கியதில் இருந்தே அரசியல் தலைவர்கள், விளையாட்டு மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
92 வயதைக் கடந்த லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிபடுத்தியுள்ளார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூவில் லதா மங்கேஷ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், தாதாசாகேப் பால்கே, பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.