நாவலை மையமாகக் கொண்டு ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் மீண்டும் ஒரு நாவலை படமாக இயக்குகிறார். இதில் சூரி நாயகனாக நடிக்கிறார்.
மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை வைத்து ‘விசாரணை’ படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இது காவல்துறையின் அவலங்களை தோலுரித்துக் காட்டியது.
அடுத்து பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி தனுஷ் நடிப்பில் ‘அசுரன்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
இதனால் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமானது.
இந்நிலையில் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதைகளை மையமாக வைத்து உருவாக்கிய கதையில் சூரியை கதையின் நாயகனாக வைத்து இயக்க வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார்.
ஆனால், அந்தத் திட்டத்தை மாற்றிவிட்டார். மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ என்ற நாவலை மையமாக வைத்துப் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நாவல் இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்குச் செல்பவர்களின் கதைகள் உணர்வுபூர்வமான ஆவணமாக எழுதப்பட்டுள்ளது.
இந்த நாவலை திரைக்கதை ஆக்கியுள்ள வெற்றிமாறன் சௌதி அரேபியா, ஓமன், கத்தார், ஆகிய நாடுகளில் படமாக்க உள்ளார்.
வெற்றிமாறன் வெளிநாட்டில் படமாக்கும் முதல் படம் இது. இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் முதல் படமாகவும் அமைந்துள்ளது.
சூரி படத்தை முடித்துவிட்டு, சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.