”வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்” என்று ஜெய்பீம் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து இருந்தார்.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நேற்று நண்பர் சூர்யா, வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு.
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் சூர்யா அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! ஜெய்பீம் போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்! என்று தெரிவிக்கப்பட்ட்டு இருந்தது.
இந்த நிலையில், மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“ வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.