இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்.அந்தப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய அடுத்த படமான ‘கைதி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய, நடிகர் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் என நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்திருந்த இப்படம், பொங்கல் தினத்தையொட்டி வெளியானது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், வசூல் ரீதியாகப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ், கனகராஜ் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாலும், தேர்தல் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாலும் இப்படத்தின் படப்பிடிப்பை சிறிது காலம் ஒத்திவைக்க கமல் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில், நடிகர் விஜய்சேதுபதியை நாயகனாக வைத்து, லோகேஷ் கனகராஜ் படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.