காமெடி நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர் யோகிபாபு. இவர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களிலும் தற்போது ஆர்வத்துடன் நடித்து வருகிறார். விரைவில் வெளிவரவுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.
இந்திய மரபில் கூறப்படும், மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது கதைகள் இணைந்த ஆந்தாலஜி திரைப்படமாக ‘நவரசா’ உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 6-ம் தேதி OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.
நவரசா பற்றி நடிகர் யோகிபாபு கூறும்போது, ‘சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அதனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். நகைச்சுவையில் சாதனை படைத்த, தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனைதை கவர்ந்துள்ளனர். அதே போல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். “நவரசா” ஆந்தாலஜி திரைப்படமே, மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி ஒன்பது கதைகளை சொல்லும் திரைப்படம். அப்படியான ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.