பிப்ரவரி 1-ம் தேதி, சனிக்கிழமை விடுமுறை நாள் என்றாலும் அன்றைய தினமே, 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளிடமிருந்து வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளைப் பெற்று பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. பட்ஜெட்டுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது பட்ஜெட் டிவிஷன்.
ஆக்ஸ்பாம் என்ற உரிமைகள் அமைப்பு டைம் டூ கேர் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் உலகிலுள்ள 2 ஆயிரத்து 153 பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு உலக மக்கள்தொகையில் 60 சதவீதமாக உள்ள 460 கோடி பேர் கைவசம் உள்ள தொகைக்கு நிகரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 1 சதவீதமே உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து வரியை ஆண்டுக்கு பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதம் கூடுதலாக செலுத்தினாலேயே 12 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- 2017 ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்தியாவில் 101 க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
- இந்தியாவின் 1 சதவிகித செல்வந்தர்களின் சொத்து கடந்த 2018ல் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
- இந்திய பணக்கார மக்களின் சொத்து மதிப்பு சென்ற வருடத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.2,200 கோடி உயர்ந்துள்ளது.
- 13.6 கோடி இந்திய ஏழை மக்கள் கடந்த 2004லிருந்து இன்றுவரை கடன் சுமையில் தான் இருக்கின்றனர்.
இந்தியாவின் 2018-19 நிதியாண்டு பட்ஜெட்டின் தொகை 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடி ரூபாய் என்றும் அது நாட்டில் உள்ள 63 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்தை விட குறைவு ஆகும்.
பொருளாதாரத்தில் நலிவை சந்தித்துள்ள நாடுகளின் அரசாங்கங்களும் செல்வந்தர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கஜானாக்களை நிரப்புவதில் குறியாக இருப்பதாகவும், தெளிவான கொள்கைகளை வகுத்து அரசாங்கங்கள் செயல்படாதவரை இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும், இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியாவின் சமூக மற்றும் ஜனநாயக கட்டுமானம் சிதைந்துவிடும் என ஆக்ஸ்பாம் நிறுவனம் கூறியுள்ளது.