ஊதிய உயர்வு தொடர்பான வங்கி நிர்வாகத்தினுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் செயல்பட வேண்டும், 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் இதுதொடர்பாக வேலைநிறுத்தபோராட்டத்தை வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இதையடுத்து கடந்த 27ம் தேதி டெல்லியில் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையரிடமும், நேற்றைய தினம் மும்பையில் வங்கி நிர்வாகத்துடனும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அதில் சுமூகமான முடிவுகள் எட்டப்படாததால் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் திட்டமிட்டபடி போராட்டம் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனால்இன்று மற்றும் நாளை வங்கிகள் இயங்காது. அதன்பின் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பதால் 3 நாட்களுக்கு வங்கிச் சேவை இருக்காது. பிப்ரவரி 1ம் தேதி (சனிக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே இரண்டு நாட்களுக்கு வங்கிச் சேவை பாதிக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டம் காரணமாக பணம், செக், DD பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.