கேரளாவில் கடலை வியாபாரி ஒருவருக்கு லாட்டரியில் ரூபாய் 60 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் இருட்டி பகுதியை சேர்ந்த சமீர் என்ற கடலை வியாபாரி தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் கடலை வியாபாரம் செய்யும் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையில் கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் விற்கும் கடை ஒன்று உள்ளது.கடந்த 12 ஆண்டுகளாக இந்த கடையில் லாட்டரி சீட்டுகளை வாங்கிய சமீருக்கு பரிசுகள் ஏதும் விழாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சில நாட்கள் முன்பு லாட்டரி கடைக்காரரிடம் தனக்கு 3 லாட்டரி சீட்டுகள் வேண்டுமென கூற, அவரும் 3 லாட்டரி சீட்டுகளில் சமீரின் பெயரை எழுதி வைத்திருக்கிறார். இந்நிலையில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட முடிவில், சமீருக்கான 3 லாட்டரிகளில் ஒரு சீட்டுக்கு ரூபாய் 60 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.
இந்தப் பரிசு குறித்து சமீர் கூறுகையில், லாட்டரியில் பரிசு விழுந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும், சமீபத்தில் தான் வீடு கட்ட தான் வாங்கிய கடனை இந்த பணம் மூலம் அடைக்க இருப்பதாகவும், தனது குழந்தைகளின் கல்விக்கு இந்த பணத்தை செலவழிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.