உஜ்ஜைன்:-
கான்பூரில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவன் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அவனை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது அவனும், அவனுடைய கூட்டாளிகளும் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியானார்கள்.
போலீஸ் துப்பாக்கி சூட்டில் விகாஸ் துபே கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து, விகாஸ் துபேவுக்கு நெருக்கமான 5 பேர் கைது செய்யப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் திவீரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் அவரை கைது செய்ய அவளது கிராமத்திற்கு செல்வது குறித்து தகவல் அறித்த 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
கான்பூரில் இருந்து தப்பிய துபே, நேற்று முன்தினம் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா எல்லையின் ஒரு விடுதியில் தங்கியதாகக் கூறப்படுகிறது. அங்கு போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து விகாஸ் தூபே தப்பி விட்டான்.
இதையடுத்து, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரின் பிரபல பழம்பெரும் மஹாகாலபைரவன் கோயிலுக்கு செல்ல முயன்றான். இதற்காக வெளியில் பூஜை பொருட்கள் வாங்கியவரை கடைக்காரர் அடையாளம் கண்டு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் கோயிலின் காவலர்களுக்கும், உஜ்ஜைன் போலீஸுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலின் உள்ளே நுழைய முயன்ற விகாஸை அதன் காவலர்கள் மறித்து விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் விகாஸ் ஒரு போலி அடையாள அட்டை காண்பித்துள்ளான். அதற்குள் அங்கு வந்து போலீஸார் விகாஸை சுற்றி வளைத்தனர்.
உஜ்ஜைனின் மஹாகால் கோயிலில் துபேவைக் கைது செய்த போலீஸார் அவனை வண்டியில் ஏற்ற முற்பட்டனர்.
அப்போது விகாஸ் துபே, “நான் விகாஸ் துபே, கான்பூர்காரன்” என மிரட்டும் தொனியில் சொன்னதும், அவனைப் பிடித்திருந்த போலீஸில் ஒருவர் பளார் என அறை விட்டார். பின்னர், அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.
மூன்று மாநில போலீஸார் இணைந்து துபேவை தேடி வந்த நிலையில் துபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில்தான், அவரின் நெருங்கிய கூட்டாளியான அமன் துபே உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
உஜ்ஜைன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள விகாஸ் துபேவை ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ செய்ய கான்பூர் போலீஸ் மபி மாநிலம் விரைந்துள்ளது.
துபே மீது கொலை, ஆள் கடத்தல், கலவரம் உள்ளிட்டப் பிரிவுகளில் 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விகாஸ் துபேவை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.5 லட்சமாக உத்தரபிரதேச அரசு உயர்த்தி உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளான்.
இதனிடையே ரவுடி விகாஸ் துபே போலீசார் தன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தானே உஜ்ஜயினி மகாகால் கோவிலில் உள்ள காவலர்களிடம் சென்று நான் தான் விகாஸ் துபே என்று கூறி சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்:-
ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டானா அல்லது தானே முன்வந்து சரணடைந்தானா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
விகாஸ் கைது கைது தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில்:-
குற்றம் செய்தவர்கள் காலபைரவரின் பாதத்தில் சரணடைந்தால், அவர் அவர்களை காப்பாற்ற மாட்டார். அவர்களுக்கான உரிய தண்டனையை தான் வழங்குவார். அதுதான் தற்பொழுது விகால் துபே-க்கு நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.