மும்பை:-
மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஐஎன்எஸ் ஆங்கர் (INS ANGRE) என்ற கப்பலின் மாலுமிகளாக பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7-ம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தமாக ஐஎன்எஸ் ஆங்கர் கப்பல் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. ஐஎன்எஸ் ஆங்கர் அல்லது நேவல் பராக்ஸ் (Naval Barracks) என்று அழைக்கப்படும் இந்த கப்பல் மேற்கு கப்பற்படையின் தளவாடங்கள் மற்றும் நிர்வாக உதவிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவர்கள் கடற்படை தளத்தில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt) என்ற கப்பலில் பயணம் செய்த 4865 பேரில் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இவர்களில் மாலுமி ஒருவர் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இவர்கள் குவாம் (Guam) நகரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்னதாக சார்லஸ் ராபர்ட் தாக்கர் (Charles Robert Thacker) (41) என்ற மாலுமி கொரோனா தோற்றால் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஃபிரஞ்ச் கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கிக் கப்பலான FS Charles de Gaulle (R91) என்ற கப்பலில் உள்ள 50 பேருக்கு கொரோரா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் அமெரிக்காவைச் சேர்ந்த மாலுமிகள் ஆவர். தற்பொழுது இவர்கள் டவ்லான் (Toulon) நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.