புதுடெல்லி:-
ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதற்காக செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலளித்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறுகையில்,
“ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வரை 92.8 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.