டெல்லி:
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டினின் கருத்து தேவையற்றது என மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,”அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்.போராடும் விவசாயிகள் குறித்த எங்கள் கவலைகளை இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது”என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சா,”டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் தெரிவித்த தவறான கருத்துக்களைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இதுபோன்ற கருத்துகள் தேவையில்லாதது,குறிப்பாக இது ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை”எனத் தெரிவித்தார்.