கொல்கத்தா:
கடந்த மே மாதம் மேற்குவங்கம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.
தற்போது மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நாளை 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.