ஹைதராபாத்:-
கொரோனா பரவல் காரணமாக மனிதர்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஆனால் மனிதர்களைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளும் தற்போது சுதந்திரமாக உலா வருகின்றன. சமீபத்தில் கூட மும்பையின் புறநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு மான் ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கோல்கொண்டா கோட்டை பகுதியில் ஃபதேதர்வாசா (Fatehdarwaza)-ல் உள்ள மஸ்ஜித்-இ-நூர் (Masjid-E-Noor) வினா ரெட்டி மீது கருஞ்சிறுத்தை ஒன்று ஏறும் வீடியோ வைரல் ஆனது.
இதையடுத்து கருஞ்சிறுத்தை நடமாடுவதாக கூறி அதிகாலையில் அங்கிருந்தவர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த வந்த நேரு உயிரியல் பூங்காவிலிருந்து (Nehru Zoological Park) வனத்துறையினர் அந்த கருஞ்சிறுத்தையை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அது வீட்டின் மேல் பகுதியில் உள்ள கூரைகளை கடந்து ஒவ்வொரு வீடாக கடந்து சென்றது. இந்நிலையில் வனத்துறையினர் துப்பாக்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி சுட்டு பிடித்தனர்.
அப்போது தான் அது கருஞ்சிறுத்தை அல்ல காட்டுப் பூனை என்பது தெரிய வந்தது. இதனால் அதிகாலையில் இருந்து ஐதராபாத்தில் நீடித்து வந்த அச்சம் முடிவுக்கு வந்தது. அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கிய தேடுதல் பணி காலை 9:30 மணிக்கு முடிவடைந்தது.