மும்பை:-
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் (98) இன்று காலமானார்.
திலீப் குமார் கடந்த ஜூன் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்த தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் 1944-ம் ஆண்டில் நடிகராக அறிமுகமாகி, 1950,60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
அவரது நடிப்பில் வெளியான ‘தேவ்தாஸ்’, ‘மொகல்-இ-அஸாம்’, ‘கங்கா ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.
50 ஆண்டுகளில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘கிலா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டில் திலீப் குமாருக்கு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார்.
திலீப் குமாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.