சென்னை:-
சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ரோவர் கருவி எந்த பாதிப்பும் இன்றி நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாக, சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சந்திராயன் 2 ராக்கெட் மூலம் நிலவினை ஆராய்வதற்காக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அனுப்பப்பட்டது. (பிரக்யான் என்றார் ஞானம் என்று அர்த்தம்).
நிலவில் விக்ரம் லாண்டரை தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் பிரக்யான் ரோவர் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக இஸ்ரோ தெரிவித்தது.
இதனிடையே, அதன் உடைந்த பாகங்களை நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்களை கொண்டு சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் எனும் மென்பொறியாளர் கண்டுபிடித்து தெரிவித்தார்.
இந்நிலையில் இஸ்ரோவிற்கு அவர் அனுப்பியுள்ள புதிய மின்னஞ்சல் தொடர்பான விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை ஆராய்ச்சி செய்த போது, லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் கருவி சேதமின்றி தரையிறங்கி இருப்பதையும், மேலும் சில மீட்டர் தூரத்திற்கு அது பயணம் செய்து இருப்பதை காண முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்கருவியின் பூமிக்கு தகவல் அனுப்பும் திறன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நிலவில் உடைந்து கிடந்த பாதங்களை ஆராய்ந்த போது முதலில் Langmuir probe கருவியை கண்டறிந்தேன். இதை தவிர சோலார் பேனல்கள், ஆன்டெனா, ரெட்ரோ பேக்கிங் இஞ்சின் ஆகியவற்றையும் நாசாவின் புகைப்படங்கள் வாயிலாக கண்டறிந்தேன். இதன் மூலமாக பிரக்யான் ரோவர் நிலவில் சேதமின்றி தரையிறங்கி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறினார்.