டெல்லி:-
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் முக்கியமானவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். இவர் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வீரர்கள் மகிழ்ச்சியோடு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இவர் அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் எதையாவது பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வகையில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் பாடல் ஒன்றிற்கு பாங்க்ரா நடனம் ஆடும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீரேந்திர சேவாக் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பகிர்ந்ததோடு, “ஒருசிலருக்கு சவாலான சூழ்நிலைகளிலும் மகிழும் தைரியம் உள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இந்திய வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக பாங்க்ரா நடனம் ஆடுகிறார்கள். இவர்களின் மகிழ்ச்சி மற்றும் அற்புதமான ஆற்றலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. ஜெய் ஜவான்! என்று கூறியுள்ளார்.
எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.