காந்திநகர்:-
பிரபல ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனப்படும் சர்தார் பட்டேல் சிலையை 30,000 கோடிக்கு விற்பதாக விளம்பரம் செய்திருந்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகிலேயே உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் படேலின் சிலை நர்மதா நதிக்கரையில் கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக குஜராத் அரசின் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 30,000 கோடிக்கு விற்பதற்காக OLX இல் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் விளம்பரம் செய்திருந்தார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் மீது நர்மதா மாவட்டம் கேவாடியா காவல்துறையினர் அந்த மர்மநபர்கள் மீது ஏமாற்றுதல் மற்றும் மோசடி (Cheating and forgery), தொற்றுநோய் சட்டம் (Epidemic Diseases Act) தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே OLX விற்பனை தளத்திலிருந்து அந்த போலி விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டதாக துணை ஆட்சியர் நீலேஷ் துபே தெரிவித்தார்.