சூப்பர் பிங்க் மூன் (இளஞ்சிவப்பு முழு நிலவு) வானில் இன்று தோன்கிறது. 2020-ம் ஆண்டில் இதுவே மிகப்பெரிய, பிரகாசமான முழு நிலவாக இருக்கும்.
நிலவு, முழு நிலவை (பவுர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது. இவை சாதாரணமாக வானில் தோன்றும் நிலவை விட ஏழு சதவீதம் பெரிதாகவும் 15 சதவீதம் அதிக பிரகாசத்துடன் காட்சியளிக்கும் காரணத்தால் சூப்பர் மூன் எனப்படுகிறது.
இந்நிலையில் இந்த வசந்த காலத்தில் முதல் முழு நிலவாக சூப்பர் பிங்க் நிலா தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இளஞ்சிவப்பு நிலா என அழைக்கப்பட்டாலும், அது அந்த நிறத்தில் இருக்காது. வட அமெரிக்காவில் ஓர் இளம் சிவப்பு மலர் கொத்துக் கொத்தாக பூப்பதால், இந்த சூப்பர் மூனுக்கு ‘சூப்பர் பிங்க் மூன்’ என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏப்ரல் 8-ம் தேதி காலை 8.05 மணிக்கு இதன் பிரகாசம் உச்ச அளவை எட்டுகிறது. நள்ளிரவில் ரசிக்கலாம். அப்போது நிலவு, பூமிக்கு நெருக்கமாக 3,56,907 கி.மீ. தொலைவுக்கு வருகிறது.
அடுத்த சூப்பர் மூன் மே மாதம் ஏழாம் தேதி தோன்றும் இதுவே 2020 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூனாக இருக்கும்.