கோஹிமா:
நாகாலாந்தில் நாய் இறைச்சியை விற்க அம்மாநில உயர்நீதிமன்ற கோஹிமா கிளை அனுமதி அளித்துள்ளது.
நாகாலாந்து, மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களது பாரம்பரிய உணவாக நாய் இறைச்சியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இறைச்சிக்காக நாய்களை மூட்டைகளில் கட்டி வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது.இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து வணிக நோக்குடன் நாய் இறைச்சியை விற்பனை செய்ய நாகாலாந்து அரசு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.அரசு விதித்த தடையை நீக்க கோரி நாய் இறைச்சி இறக்குமதியாளர்களும், வர்த்தகர்களும் அசாம் மாநில கவுகாத்தி உயர் நீதிமன்ற கோஹிமா கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து நாகாலாந்து அரசு விதித்த தடைக்கு இடைக்காலத்தடை விதித்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி நாய் இறைச்சி விற்பனை, வணிகம் மற்றும் இறக்குமதிக்கு அனுமதியளித்து அளித்து உத்தரவிட்டார்.