வட-கிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மிக கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
மேலும் CAA, NRC மற்றும் NRP குறித்த சரியான புரிதல் வேண்டும் என ரஜினிக்கு கடிதம் எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை அழைத்து பேசுவோம் எனவும் ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தை அவரது போயஸ் இல்லத்தில் ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் கடந்த பிப் 29-ம் தேதி சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 1) ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பின் போது CAA, NRC மற்றும் NRP குறித்தும் தங்களது கருத்துகளை ரஜினியிடம் தெரிவித்துள்ளார்கள். ‘NRP காரணமாக முஸ்லிம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ரஜினியிடம் விரிவாகக் கூறினோம்’ என்று ரஜினியுடான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் மத்தியில் பாகவி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பதிவில் ரஜினி கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.