புத்தாண்டு பிறப்பிற்கு பிறகு டெல்லியில் கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தான் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே டெல்லியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகளை துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
அதன்படி, டெல்லி அரசு ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்களின் வெளியே மக்கள் கூடுவதை தடுக்க மீண்டும் பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் முழு இருக்கைகளுடன் இயக்கப்படும் என்றும், ஆனால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.