புதுடில்லி:-
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமென மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு வரும் விமானங்கள், போன்ற சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:-
கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்த ஒரு இந்தியருக்கும் ஆபத்து இல்லையென நம்பிக்கை ஏற்படும் போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சோதனையான நேரத்தில் ஒத்துழைப்பு நல்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள். நாம் ஒன்றிணைந்து இதனை கடப்போம். வலிமையாக வெளிப்படுவோம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், நாடு தழுவிய ஊரடங்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதன் விளைவாக நிலவும் சூழலால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு தனது வருத்தத்தையும் அவர் தெரிவித்தார்.