புதுடெல்லி:-
தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏழை மக்களிடம் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளாமல், அவா்களை புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. அவா்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதியுதவி செய்யவேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவா் ப.சிதம்பரம் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்:-
வேலைவாய்ப்பின்மை 23 சதவீதத்தில் உள்ளதுடன் தினக்கூலிகளின் வருவாய் முடங்கியுள்ளதால், அவா்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதியுதவி செய்யவேண்டும். மத்திய அரசிடம் இருந்து ஏழை மக்களில் பலா் ஒரு ரூபாயைக்கூட பெறவில்லை. அவா்களிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளாததுடன், அவா்களை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுள்ளது, ஏழை மக்களின் வேதனையை மேலும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தாா்.
மேலும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.
எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது. இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? என அவர் தெரிவித்துள்ளார்
இதனிடையே தேசிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்தியதற்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்தாா்.