டெல்லி :
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.க எம்.பி. கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளது. நிதி திரட்டுவது தொடர்பாக பிரசாரத்தை RSS அமைப்பு துவக்கியுள்ளது. டெல்லி மாநில பாஜக வும் நிதி திரட்டுவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளது. இதற்காக ரூ.10, 100,1,000 மதிப்புள்ள கூப்பன்களை தயாரித்து வீடுகளில் வழங்கி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜ.க எம்.பி. கவுதம் கம்பீர், தனது பங்களிப்பாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சிறப்பான ராமர் கோவில் கட்டப்படுவது என்பது அனைத்து இந்தியர்களின் கனவு. நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக சிறிய தொகை பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது”.என்று அவர் கூறியுள்ளார்.