தர்மசாலா:-
ஹிமாச்சலப் பிரதேசத்தில் சீனாவிற்கு எதிராக திபெத் நாட்டவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா சீனாவிற்கு எதிராக திபெத் இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக திபெத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோன்போ தன்டப் (Gonpo Dhundup) கூறுகையில்:-
இன்று உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்களை சீனாவிற்கு எதிராக போராட ஒருங்கிணைத்துள்ளோம். சீன பொருட்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், அண்டை நாடுகளில் சீனாவின் ஊடுருவல் மற்றும் சீனா இழைத்து வரும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக நாங்கள் ஒருங்கிணைந்து உள்ளோம். சீனாவை ஆளும் கம்யூனிச அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான மற்றும் பொய்த் தகவல்களை அளித்ததன் விளைவாக மொத்த உலகமும் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள் என்றார்.
மேலும், சீனாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு சீன பொருட்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.
கடந்த ஜூலை 29 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் திரண்ட திபெத்தியர்கள் சீனாவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
1950கள் வரையில் திபெத் தனி நாடாக திகழ்ந்தது. அதன் பிறகு வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்புச் செய்த சீனா எங்களது நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. சீனாவை எதிர்த்ததன் காரணமாக அந்நாட்டில் இருந்து விரட்டப்பட்ட மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தற்போதும் இந்தியாவில் தான் வசித்து வருகிறார். மேலும் சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பிரதேசம் கூட சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது ஆகும்.