டெல்லி:
நவம்பர் 7 முதல் 30- ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில், ‘இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க்’ என்ற அமைப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில், காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது.இதனால், தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, வரும் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா???? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இது தொர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.