மும்பை:-
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைப் போலவே, 76 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு பெரிய பயங்கர வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவத்தை போலவே 1944 ஏப்ரல் 14, அன்று மும்பையில் கப்பல் நிறுத்துமிடத்தில், பயங்கரமான வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. அதில் 800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.
மேலும், அந்த பயங்கர வெடிப்பு வெடித்சம்பவத்தில், துறைமுகத்தின் அருகில் உள்ள கட்டிடங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன.
பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் நீண்ட காலமாக வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 100 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். 4000 பேர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தது.
இதேபோன்று 1944 ஏப்ரல் 14ம் தேதி அன்றைய பம்பாயில் உள்ள கப்பல் நிறுத்துமிடத்தில் (Dock Yard) ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவம், இந்திய வரலாற்றில் மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாகும். இந்த வெடிப்பு சம்பவம் S.S Fort Stikine Explosion என்று அழைக்கப்படும்.
76 வருடங்களுக்கு முன்பு பம்பாயில் நடந்தது என்ன?
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில், மும்பையின் விக்டோரியா டாக் எனப்படும் கப்பல் நிறுத்துமிடத்தில், தான் இந்த பெரு வெடிப்பு ஏற்பட்டது. SS Fort Stikine என்ற சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இந்த கப்பலில் நூற்றுக்கணக்கான பருத்தி மூட்டைகள், தங்கம் மற்றும் 300 டன் டிரினிட்ரோடோலூயீன் (TNT அல்லது டைனமைட்), நீர்மூழ்கி ஏவுகணைகள் (Torpedos), கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 1395 டன் வெடிபொருட்கள் இருந்தன.
டைனமைட் வெடித்ததால் பெருமளவில் சேதம் ஏற்பட்டது, அருகிலிருந்த கப்பல்களும் பலத்த சேதத்துக்கு உள்ளாயின. மொத்தமாக 13 கப்பல்கள் மூழ்கியது. துறைமுகத்தை சுற்றி இருந்த கட்டிடங்கள் வீடுகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது. துறைமுகப் பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அன்றைய நாளிதழ்களில் இந்த சம்பவம் பரபரப்புச் செய்தியானது. இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு 8 மைல்கள் சுற்றளவு வரை உணரப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததால், ஆரம்பத்தில் இது ஜப்பானியர்களின் நாசவேலை தான் காரணம் என்று சிலர் கூறினர். ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கவனக்குறைவின் காரணமாக ஏற்பட்ட விபத்து என தெரியவந்தது.
குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆனது. வேகமாக பரவிய தீயை அணைக்க முயன்றபோது, சுமார் 71 தீயணைப்பு வீரர்களும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் நினைவாக, ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் தீயணைப்பு படையினர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சுமார் 5 லட்சம் டன் குப்பைகளை அகற்ற 8000 பேர், தொடர்ச்சியாக ஏழு மாதங்கள் பணியாற்றினர்.
இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும் அமெரிக்கர்கள் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசும் வரையில் ஆசியப் பகுதியில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவமாக இந்த பம்பாய் கப்பல் குண்டு வெடிப்பு சம்பவம் தான் பார்க்கப்பட்டது.