டீசலுக்காக கர்நாடகாவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்று டீசல் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. வாகன எரிபொருள் என்பது சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக மாறும் நிலைக்கு போய் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்காக வாகனங்கள் திருடு போகும் சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெங்களூரு, மைசூரு, ஹுப்பாளி ஆகிய நகரங்களில் தனி நபர்களின் வாகனங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களிலேயே பெட்ரோல், டீசலை மர்ம நபர்கள் திருடும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
எரிபொருள் திருட்டை தவிர்க்க இதையடுத்து ரோந்து பணிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு துணை காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குப்பி பேருந்து நிலைய டிப்போவில் கடந்த ஞாயிறு அன்று இரவு 9.40 மணியளவில் ஹனுமந்தராயா என்ற ஓட்டுநர் KSRTC அரசு பேருந்தை நிறுத்தி விட்டு பணிமனைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை 6 மணிக்கு பேருந்தை எடுக்க வந்த போது, டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காணவில்லை. உடனே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. காணாமல் போன KSRTCபேருந்தில் ஜிபிஎஸ் வசதி இருந்ததால், அதைக் கொண்டு பேருந்து இருக்கும் இடத்தை போலீசார் தேடினர்.
குப்பி பேருந்து நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜானேனாஹள்ளி அருகே பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தை ஆய்வு செய்ததில், டீசலை மட்டும் திருடிக் கொண்டு திருடர்கள் தப்பியோடிவிட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள MRPL எனப்படும் மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து டீசல் திருடுபோனது. இங்கு செல்லும் முதன்மையான பைப்பில் துளையிட்டு மர்ம கும்பல் டீசலை பிடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.