மாமியார் வீடு, கம்பி எண்ணுவது என சிறை வாழ்க்கையைப் பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. அந்த கம்பி போட்ட கதவுகளுக்குப் பின் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும், நாமளும் ஜெயிலுக்கு போன எப்படி இருப்போம் என சிந்தித்துப் பார்ப்பவர்கள் ஏராளம்.
சரி, அதற்காக தவறு செய்து தான் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்கில்லை. இப்போ எல்லாரும் எப்படி கிட்சன் டூர், பாத்ரூம் டூர், பெட்ரூம் டூர் லாம் போறாங்களோ அதுபோல ஜெயில் டூர் என்ற வித்தியாசமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது கர்நாடகா.
ஆமாங்க, கோவா, சிம்லா, கூர்க் என சுற்றுலாத் தலங்களுக்கு போவோமோ அது போல ஜெயிலுக்கும் சுற்றுலா செல்லும் திட்டம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலையில் சிறைவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் 500 ரூபாயில் சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பார்வையாளர்களுக்கும் சிறைக் கைதிகளுக்கான ஆடை மற்றும் கைதி எண்ணும் வழங்கப்படும், அவர்கள் சிறை கைதிகளுடன் சிறை அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பின்னர், காலை எழுந்தது முதல் இரவு வரை சிறைக்குள் கைதிகள் என்னென்ன செய்வார்களோ அதையே பார்வையாளர்களும் செய்ய வேண்டும். அவர்களுடன் சேர்ந்து சிறை வளாகத்தில் வேலை செய்ய வேண்டும்.
முக்கியமாக சிறைக் கைதிகளுடன் இணைந்து உணவை உண்ண வேண்டும். பார்வையாளர்கள் வார இறுதி நாள்களில் சிறைக்கு வந்து தங்கினால் அவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படும்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,
சிறையில்,பார்வையாளர்களுக்கு எந்த சலுகைகையும் அளிக்கப்படாது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பது மற்றும் கைதிகள் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
இதற்குமுன்னரே தெலுங்கானாவில், 220 ஆண்டுகள் பழைமையான சங்கரெட்டி மத்தியச் சிறைச்சாலையில் “சிறைச்சாலை அனுபவத்தை உணர்வோம்’ என்ற புதிய சுற்றுலாத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோ யாரெல்லாம் நீதிமன்ற விசாரணை சிக்கல் இல்லாமல் சிறை பறவையாக வாழ்ந்துபார்க்க ஆசையோ இந்த ஜெயில் டூரை மிஸ் பண்ணாதீங்க