திருவனந்தபுரம்:-
கேரளாவில் பேருந்து கட்டணம் 25 சதவீதம் வரை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் வருமானம் இல்லாமல் பேரிழப்பை சந்தித்துள்ளன. ஊரடங்கு காலத்தில் கேரள போக்குவரத்துத்துறை 37 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பை சந்தித்தது.
தொழிலாளர்களுக்கு ஊதியம் போன்றவற்றை வழங்குவதிலும் மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி எம். ராமச்சந்திரன் தலைமையிலான விசாரணைக் குழு அரசுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்தது.
இதையடுத்து, பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயாக இருக்கும். முதல் 5 கிலோமீட்டருக்குப் பதிலாக இனி இரண்டு கிலோமீட்டர் வீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
அதேவேளையில் குறைந்தபட்ச கட்டணமாக 8 ரூபாய் அப்படியே இருக்கும் என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் A.K.சசீந்திரன் கூறினார்.
அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதால், தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்த அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.