மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
எனினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
ஆனால் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோபன் தேவ் சட்டோபாத்யாயா ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் வக்கீல் பிரியங்கா டிப்ரிவாலை பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது.
இதில் மம்தா பானர்ஜிக்கும், பிரியங்கா டிப்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதேசமயம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
இன்று வாக்குஎண்ணிகை நடைபெற்றது, தொடர்ந்து முன்னிலையில் இருந்த மம்தா 20-வது சுற்றில் பாஜகவின் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.