மங்களூரு:-
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நண்பனை அழைத்து வர நூதன முறையை கையாண்டிருக்கிறான் கல்லூரி மாணவன் ஒருவன்.
ஆர்யசமாஜ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவன் ஒருவன், தனியாக தங்கி இருக்க பயந்து, நண்பனை அழைத்துவரத் திட்டமிட்டான். ஆனால் குடியிருப்போர் சங்கத்தினர் வெளியாட்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், பெரிய சூட்கேசுக்குள் தனது நண்பனை அடைத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான்.
சூட்கேஸை சிரமப்பட்டு தூக்கிவந்தான் அந்த மாணவன், திடீரென சூட்கேஸ் அசைந்ததைக் கண்ட குடியிருப்புவாசிகள் அதைத் திறக்கச் சொல்லி வற்புறுத்தினர். முதலில் மறுத்த அந்த மாணவன் வேறு வழியின்றி சூட்கேசை திறந்து காட்ட, அதில் பதுங்கி இருந்த நண்பன் வெளியே வந்தான்.
உடனடியாக, தகவல் அறிந்து விரைந்து வந்த கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் இருவரையும் ஜுவனைல் ஜஸ்டிஸ் போர்டு (Juvenile Justice Board) முன்பு ஆஜர்படுத்தினார்கள்.