நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்ற புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 13 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணமடைந்தார்.
6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் 2013ல் சிறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மற்ற நால்வருக்கும் 2014ல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வுமனு , கருணை மனுக்களால் தண்டனை நிறைவேற்றுவது தள்ளிப்போனது.
இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதற்கான புதிய தேதி அறிவிப்பது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.
4 பேரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.