ராஜநாகம் ஒன்றை இளைஞர் ஒருவர் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கோடைக் காலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள் பலரும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதே போன்று மிருகங்களையும் வெயிலின் கொடுமை விட்டு வைக்கவில்லை. பொதுவாகக் காடுகளில் தண்ணீர் தேடி அலையும் மிருகங்களுக்காக, அங்கங்கே தண்ணீர் தொட்டி அமைத்து அவற்றின் தண்ணீர் தேவையை வனத்துறையினர் பூர்த்தி செய்வது வழக்கம்.
ஆனால் நபர் ஒருவர் மிக கேஷூவலாக பல அடி நீளமுள்ள ராஜநாகத்தை, வாலியிலிருந்து நீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார். சுமார் 51 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவுடன் அதிகாரி நந்தா:-
“வெயில் காலம்… யாருக்குத்தான் குளிக்கப் பிடிக்காது. ஆனால் தயவு செய்து இதை முயற்சிக்காதீர்கள். மிக ஆபத்தானது!” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோவில், ஒரு நபர், 6 அடிக்கு மேல் நீளமுள்ள ராஜநாகத்தின் மீது வாலியிலிருந்து தண்ணீரை ஊற்றுகிறார். அந்த பாம்பும் எந்தவித சீற்றத்தையும் வெளிக்காட்டாமல் அப்படியே படமெடுத்து நிற்கிறது. பின்னர், பக்கெட்டை கீழே வைத்துவிட்டுப் பாம்பைக் கொஞ்சுகிறார் அந்த நபர். பிறகு மீண்டும் இன்னொரு வாலி தண்ணீர் பிடித்து அதன் மீது ஊற்றுகிறார். இந்த மொத்த சம்பவத்தின்போதும் ஒரு பசுவைப் போல அமைதியாக இருக்கிறது ராஜநாகம்.
வீடியோவில் வரும் நபர், காட்டுயிர் பாதுகாவலரும் பாம்பு நிபுணருமான வவா சுரேஷ் என்பதை சிலர் கண்டுபிடித்துள்ளனர்.