இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா கொண்டாட்டம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ம் ஆண்டு இதே நாளில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனை பறைசாற்றும் வகையிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நாட்டு மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி தேசிய அரசியல் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கியது. 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அந்த தினத்தையே குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
இந்தியா விடுதலை அடைந்தது உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசாக திகழ்கிறது. நமது அரசியலமைப்பு சட்டம் மிகவும் நீளமானது, மற்றும் நெகிழா – நெகிழ்ச்சி தன்மையும் கொண்டது.
இதன் அர்த்தம், இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதாரண காலங்களில் மாற்றுவதற்கு சிரமமானதாகவும், நெருக்கடி காலங்களில் மாற்றுவதற்கு சுலபமானதாகவும் இருப்பதே ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன. இது கூட்டாட்சி தத்துவம் கொண்டது என்றாலும், ஒரு வலுவான ஒற்றைச்சார்பை கொண்டுள்ளது.
இந்நிலையில், 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் காலை 11 மணிக்கு கொண்டாடப்படும் விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
குடியரசு தலைவரின் உரைக்கு பிறகு அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் (NALSAR) உடன் இணைந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இந்திய அரசியலமைப்பு குறித்த ஆன்லைன் பாடத்தை இன்று தொடங்குகிறது. சட்டப் பல்கலைக்கழகம். ‘அரசியலமைப்பு தினத்தை’ முன்னிட்டு இந்த பாட திட்டம் தொடங்கப்படுகிறது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதை தொடங்கி வைக்கிறார். மேலும் விபரங்களுக்கு legalaffairs.nalsar.ac.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
இதனிடையே பிரதமர் மோடி அரசு அரசியலைப்பு அமைப்பு சட்டத்தை அவமரியாதை செய்து வருவதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2வது ஆண்டாக இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.